Powered by Blogger.

இந்தியா – Google செய்திகள்

Re: சிங்களப் பேரினவாதம் முஸ்லிம்களையும் ஒடுக்குகிறது-முஸ்தீன்

Monday, August 2, 2010





இலங்கை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குனர். கீற்று ஆறாம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி நடந்த 'இஸ்லாமியர்கள் மீதான சமூக, அரசியல் ஒடுக்குமுறைகள்' தொடர்பான கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்திருந்தார். அவரிடம் இலங்கை முஸ்லிம் மக்களின் நிலை, தமிழர் – முஸ்லிம்கள், பிளவு, பேரினவாதத்தின் ஒடுக்குமுறை குறித்து எடுத்த விரிவான நேர்காணல் இது. அவரவர் தரப்பு நியாயங்களை மட்டுமே அவரவர் பேசும் நிலையில், துணிச்சலுடன் தான் சார்ந்த சமூகத்தின் தவறுகளையும், போராளிக்குழுக்கள் மற்றும் அரசின் தவறுகளையும் கதைத்துள்ளார். தமிழர் – முஸ்லிம் ஒற்றுமை குறித்தான பல புதிய திறப்புகளுக்கு இந்நேர்காணல் வழிவகுக்கும் என்று நம்புகிறோம். பாதுகாப்பு சார்ந்த பிரச்சினைகளுக்காக அவரது புகைப்படம் தவிர்க்கப்பட்டுள்ளது


1.

கீற்று: இலங்கையில் முஸ்லிம்கள் மீதான முதல் தாக்குதல் எது?

அது பிரிட்டிஷ் காலத்தில் 1915ல் நடந்த கலவரம். மத வழிபாட்டுத் தலங்கள் முன்பு அமைதியாகப் போக வேண்டும் என்ற சட்டவிதி உண்டு. ஆனால் சிங்களவர்கள், பள்ளிவாசல் வழியாக 'பெர' (பறை மாதிரியான வாத்தியக்கருவி) அடித்துக் கொண்டு போனதால் பிரச்சனை ஆரம்பித்தது; பின்பு கலவரமாக மாற்றப்பட்டது. பிரிட்டிஷாரை எதிர்த்துப் போராட வேண்டிய நேரத்திலேயே இனரீதியான வேறுபாடு ஆரம்பிக்கப்பட்டது. இதன் விளைவுதான் 1915 கலவரம்.

அந்த நேரத்தில் பிரிட்டிஷார் முஸ்லிம்களுக்கு சாதகமாகத்தான் நடந்து கொண்டார்கள். முஸ்லிம்கள் பக்கம் நியாயம் இருந்தது என்பதற்காக அவர்கள் அவ்வாறு நடந்துகொள்ளவில்லை. பெரும்பான்மையை எதிர்க்க வேண்டும் என்ற காரணத்திற்காக அவர்கள் சிங்களர்களை எதிர்த்து முஸ்லிம்கள் பக்கம் நின்றார்கள்.

பிரிட்டிஷார் இந்தக் கலவரத்திற்குக் காரணமான சிங்களர்களைக் கைது செய்தனர். அவர்களை விடுதலை செய்யச்சொல்லி பிரிட்டிஷாரிடம் கோரிக்கை வைத்தவர் ராமநாதன் என்கிற தமிழர். பிற்காலத்தில் சிங்களர்களை விடுதலை செய்யச் சொல்லி நீதிமன்ற உத்தரவு வந்தது. ஆனால் கைது செய்யப்பட்டவர்கள் ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்டனர். 'கொல்லப்பட்டபின்புதான் உத்தரவு கிடைத்தது' என்று, கொல்லப்பட்டதற்கு நியாயம் கற்பிக்கப்பட்டது.

ராணுவத்திற்கும் புலிகளுக்கும் நடந்த கடைசி யுத்தத்தில் இந்திய அரசின் கோரிக்கைப்படி அதாவது தமிழக அரசியல்வாதிகள் இந்திய அரசிடம் சொல்லி அவர்கள் இலங்கை ஜனாதிபதியிடம் சொல்லி புலிகள் சரணடைவதாகக் கூறப்பட்டது. ஆனால் அதற்குள் சரணடைந்தவர்கள் அனைவரும் ராணுவத்தால் கொல்லப்பட்டனர் என்ற செய்தி பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த விடயத்திற்கு ராணுவத்தளபதி அளித்த பதில், அவர்கள் சரணடைய வருவது தங்களுக்குத் தெரியாது எனவும், அவர்கள் கொலை செய்யப்பட்ட பின்னரே தனக்கு அந்தத் தகவல் கிடைத்ததாகவும் சொன்னதாக பத்திரிகைகளில் படித்தேன். இதுபோன்ற ஒரு காரணத்தைத்தான் பிரிட்டிஷார் சிங்களர்களைக் கொல்வதற்கும் பயன்படுத்தினர்.

கீற்று: இந்தக் கலவரத்தில் முஸ்லிம்களுக்கு என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்பட்டது?

அப்போது முஸ்லிம்கள் சிலம்பம் போன்ற தற்காப்புக் கலைகளில் தேர்ந்தவர்களாக இருந்தனர். அந்தக் கலவரத்தில் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டது, வீடுகள் உடைபட்டது தவிர உயிர்ப் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் இந்தக் கலவரம் சிங்களர்கள், முஸ்லிம்கள் இடையே நீ வேறு, நான் வேறு என்ற பிரிவை ஆழமாக ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் முஸ்லிம்களும் ஒரு தவறு செய்தனர். அவர்கள் தங்களது பிரச்சனையை தங்களது பக்கம் நின்று தங்கள் கண்ணோட்டத்தில் மட்டுமே பார்த்தனர். சிங்களர்களுக்காக பிரிட்டிஷ் அரசிடம் ராமனாதன் வாதாடியதை 'தமிழர்கள் தங்களுக்கு எதிரானவர்கள்' என்ற கண்ணோட்டத்தில் தவறாகப் பார்த்தனர். சிங்களர்களும் பள்ளிவாசல் முன்பு பறை அடித்ததை தவறாகப் பார்க்கவில்லை. அதேநேரத்தில் ராமனாதனை சிங்களர்கள் வீரராகப் பார்த்தனர். அதே ராமநாதனை 50க்குப் பிறகு சிங்களர்கள் எதிரியாகப் பார்த்ததும் நடந்தது.

 ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் அந்தந்த இனக்குழு தங்களது பார்வையில் மட்டுமே பார்த்தனர். தங்கள் மொழிசார்ந்த, இனம்சார்ந்த விஷயங்களில் மட்டுமே ஆர்வமாக இருந்தனர். அவர்களது தவறுகளை சுட்டிக்காட்டும்போது ஏற்றுக்கொள்ளும் பக்குவம் யாரிடமும் இருக்கவில்லை.

கீற்று: இலங்கை சுதந்திரம் அடைந்தபிறகு நிலைமை எப்படி இருந்தது?

1948 சுதந்திரத்திற்குப் பிறகு, 1956ல் தனிச்சிங்கள சட்டம் வந்தபோது மொழிரீதியான பிரச்சனை கூர்மையடைகிறது. தமிழ் பேசுகிறவன் வேறு, சிங்களம் பேசுகிறவன் வேறு என்கிற பிரிவினை வந்தது. முஸ்லிம்கள் சிங்களர்கள் வாழும் பகுதியில் அவர்களோடு கலந்து வாழ்ந்தாலும் அவர்களது தாய்மொழி தமிழாகத்தான் இருந்தது. சிங்களர் பகுதிகளில் வாழ்ந்திருந்தாலும், அவர்களது கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் தமிழிலேயே இருந்தன. ஆனால் அவர்கள் தமிழர்கள் என்ற இனத்திற்குள் அடக்கப்படவில்லை. தமிழ் பேசும் இந்து, கிறிஸ்தவர்கள் 'தமிழர்கள்' என்றும் முஸ்லிம்கள் 'இஸ்லாமியத் தமிழர்கள்' என்றும் அடையாளப்படுத்தப்பட்டனர். இஸ்லாமியத் தமிழர்கள் என்ற வார்த்தைப் பிரயோயகம் அப்போது சர்ச்சையைக் கிளப்பியது.

இதற்காக முஸ்லிம் தலைவர்கள் அப்போது போராடிப் பார்த்தார்கள். அது தமிழ்த் தரப்பில் எடுபடவில்லை. உடனடியாக ஒரு முரண்பாட்டு ரீதியில் முஸ்லிம் தலைவர்கள் அதை அணுகத் தொடங்கினார்கள். முஸ்லிம்கள் பேசும் தமிழில் அதிகமான அரபுச் சொற்கள் கலந்திருந்ததால், தமிழர்கள் புரிந்துகொள்ளமுடியாதபடி, முஸ்லிம்களால் தமிழில் பேசமுடிந்தது. இதனால், மொழிரீதியாக 'நீ வேறு நான் வேறு' என்ற விடயத்தை முஸ்லிம் தலைவர்கள் கதைக்கத் தொடங்கினார்கள். இது பிற்காலத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

அத்தோடு, முஸ்லிம் தலைவர்கள் 'சோனகர்கள்' என்னும் புதிய இனத்துவ அடையாளத்தினுள் முஸ்லிம்களை உட்படுத்தினர். எழுபதுகளின் பிற்பாடுகளில் இந்த சோனகர் என்னும் அடையாளம்கூட கொச்சைப்படுத்தப்படும் நிலை உருவாகிறது. 'சோனி' என்கிற இழிவான உச்சரிப்புடன் முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தும் விதத்தில் தமிழர்களால் பயன்படுத்தப்பட்டது. இந்த இழிநிலையைப் போக்குவதற்கு முஸ்லிம்கள் போராடிய அதே நேரத்தில் ஒரு தமிழ் புத்திஜீவியேனும் அதைக் கண்டிக்க முன்வரவில்லையே என்கிற ஆதங்கம் இருந்தது. இவ்வாறு பயன்படுத்தவேண்டாம் என்று ஒருவராவது குரல் கொடுத்திருந்தால், இனத்துவரீதியில் ஒரு ஒருமைப்பாட்டைக் கொண்டுவந்திருக்க முடியும். இதுதவிர, சிங்களர்களும் முஸ்லிம்களைக் கொச்சைப்படுத்தும் வார்த்தைகளால்தான் அழைத்தனர். அது சிங்களப்பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்களுக்கு பெரிய பிரச்சினையாக இருந்தது.

இலங்கை முஸ்லிம்கள் அதிகம் படித்தவர்களாக இருக்கவில்லை. மிகவும் பாமரத்தனமாக இருந்தார்கள். எனவே பிரச்சனைகளை ஆழமாகப் புரிந்து கொள்ளுதல், சமூகத்தோடு ஒன்றாகக் கலத்தல் போன்றவற்றை அவர்களால் பெரிதாகச் செய்ய முடியவில்லை. இலங்கை சுதந்திரப் போரட்டத்திலும் ஓரிரு தலைவர்களைத் தவிர அவர்கள் குறிப்பிடத்தகுந்த பங்கு வகித்திருக்கவில்லை. அரசியல் ரீதியாகவும் தங்களை உட்படுத்திக்கொள்ளவில்லை. அதை அவர்கள் தனித்துப் பார்க்கவே இல்லை.

அதே நேரத்தில் முஸ்லிம்களை இனரீதியாக பிரதிநிதித்துவப்படுத்திய பிரதிநிதிகள் சிங்களப் பிரதேசத்திற்குள் சிங்கள மக்களை அண்டி வாழ்ந்தார்கள். முஸ்லிம்களுக்கான அரசியல் அதிகாரம் என்பது முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பித்த 87களுக்குப் பிறகுதான் வருகிறது. அதுவரைக்கும் முஸ்லிம்களின் அதிகாரம் இருந்தது – வடகிழக்கிற்கு வெளியில் – சிங்களர்களை அண்டி வாழ்ந்த முஸ்லிம்களின் கையில் தான். அதனால் அவர்கள் சிங்களர்களை எதிர்க்கும் போக்கைக் கொண்டிருக்கவில்லை.

சுதந்திரத்திற்குப் பிறகு தமிழர்களுக்கு என்று தனிக்கட்சிகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன. ஆனால் முஸ்லிம்களுக்கு அப்படி ஒன்று இல்லை. இலங்கையில் பெரும்பான்மையான முஸ்லிம்கள் வாழ்கிற பிரதேசம் வடக்கு, கிழக்கு மாகாணங்கள். அவர்கள் எல்லா அரசியல் போராட்டங்களிலும் தமிழர்களோடு தங்களை இணைத்துக் கொண்டார்கள். முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்த அஸ்ரப் தமிழரசுக் கட்சியின் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தோடு இணைந்து வேலை செய்தவர்தானே.

ஈழப்போராட்டம் ஆயுத வடிவத்திற்கு மாறியபின்பு, இஸ்லாமியத் தமிழர்கள் என்ற சொல்லாடல் பாரிய சிக்கல்களை ஏற்படுத்தத் தொடங்கியது. இருதரப்பும் ஒருவரையொருவர் எதிரிகளாகப் பார்க்கும் நிலைமை உருவானது.

மூன்று வருடங்களுக்கு முன்பாக தனியார் வானொலி நிகழ்ச்சி ஒன்றில் மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் அன்வர் இஸ்மாயிலுக்கும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பை சேர்ந்த ஒருவருக்கும் ஒரு கலந்துரையாடல் நடைபெறுகிறது. தமிழ்பேசும் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே நல்லுறவு வேண்டும் என்ற எண்ணத்தில் நடத்தப்பட்ட அந்த உரையாடலில் இஸ்லாமியத் தமிழர்கள் என்ற வார்த்தையை பிரயோகிக்க வேண்டாம என இஸ்மாயில் கூற, நீங்கள் வேறு நாங்கள் வேறு என்று பதில் கூறுகிறார் தமிழ்த்தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்தவர். அந்த உரையாடல் முழுவதும் இதுதொடர்பான விவாதம் தான் நடந்தது.

இதில் தவறு இருதரப்பு மீதும் இருக்கிறது. முஸ்லிம்களும் தங்களைத் தமிழர்கள் என்று சொல்வதை விரும்பவில்லை. மொழிமீது உள்ள பற்றினால் ஒரு முஸ்லிம் தன்னை தமிழர் என்று சொன்னால் அவரை விரோதியாகப் பார்க்கும் மனநிலையும் இலங்கை முஸ்லிம் சமூகத்தில் இருக்கிறது. 



0 comments:

Post a Comment

CRICKET CURRENT NEWS

CRICKET INFO LATEST PHOTO WIDGETS

  © Blogger template dev by Ourblogtemplates.com 2009

Back to TOP